”போராடுவோம்!
ஒன்றுபடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்” – ஒவ்வொரு போராட்டத்தின் போதும் எழுப்பப்படும் கோஷம் இது.
ஆனால் முந்தைய மாதிரி, இன்று இறுதி வரை, வெற்றி
கிட்டும் வரை யாரும் போராடுவதாகத் தெரியவில்லை. இது கோடைக் காலம், இது மழைக் காலம், இது குளிர்காலம் என்பது போல ”சீசனுக்கு”த்
தகுந்தவாறு போராட்டம் நடைபெறுகிறது.
கல்விக் கட்டணம்:
இந்த கல்வியாண்டு தொடங்கி முடிந்தும் விட்டது. அடுத்த கல்வியாண்டும் தொடங்கப்
போகிறது.. எப்போதும் போல பள்ளி, கல்லூரிகளில் கட்டண வசூல் நடந்து கொண்டுதான்
இருக்கின்றது. அடாவடி வசூல் எனப்படும் கட்டணக் கொள்ளையும் ஆண்டுதோறும் நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மவுனசாமிகள் ஆகிவிடுவார்கள்.
இதற்கென்று போராடுபவர்கள் இருக்கிறார்கள். களத்தில் குதிப்பார்கள். தொலைக்காட்சி,
பத்திரிகைகளில் கல்விக் கொள்ளையர்கள் பற்றி அனல் பறக்க விவாதம் நடைபெறும். இதில்
வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு விவாதம் நடத்தும் ஊடகங்களில் சிலவும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. போராட்டம் விவாதம் எல்லாம் ஒவ்வொரு ஆண்டின் கல்வியாண்டு
தொடக்கத்தில்தான். அப்புறம், மீண்டும் அடுத்த ஆண்டுதான். இது வருஷா வருஷம் நடக்கும் கதாகாலட்சேபம்தான். தீர்வு ஒன்றும் இருக்காது.
நதிநீர்ப் பிரச்சினை:
காவிரியில் ஆண்டு முழுக்க பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வருவது இல்லை.
முன்பெல்லாம் சரியாக ஜூன் மாதம் 2-ஆம் தேதி, பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு
திறக்கும் சமயம், மேட்டூர் அணையில்
இருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடுவார்கள். கர்நாடகா தகராறு செய்யத்
தொடங்கியதிலிருந்து இது கிடையாது. காவிரிநீர்ப் பிரச்சினையைக் கையில் எடுப்பவர்கள்.
ஆண்டுதோறும் ஜூன் - ஜூலை சீசனில் மட்டும் ஓங்கி ஓங்கி முழக்கம் போடுவார்கள்.
அதிலும் எதிர்பாராது மழை அதிகம் பெய்து காவிரி கரை புரண்டு ஓடத் துவங்கி விட்டால்
போராட்டம் கிடையாது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையும் இவ்வாறே. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
முயற்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்பும், அரசு கெஜட்டில் அறிவிப்பும் வந்துவிட்டது.
இந்த வ்ருடம் காவிரியில் தண்ணீர் வரும் நாளைப் பார்க்க வேண்டும். நதிநீர்ப்
பிரச்சினைக்காகப் போராடுபவர்கள் யாரும்,
விளை நிலங்களையெல்லாம் பட்டா போட்டு விற்றுக் கொண்டு இருக்கும் உள்ளூர்
அரசியல்வாதிகளை தடுப்பதும் இல்லை கண்டிப்பதும் இல்லை.
பெட்ரோல்,டீசல் மண்எண்ணெய் விலை உயர்வு:
வருடா வருடம் பெட்ரோல் விலையையும் மற்ற விலைகளையும் ஏற்றிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். இவர்களும் வருடா வருடம் ஒரு நாள் பந்த் , போராட்டம் என்று
நடத்துகிறார்கள். ஆட்சியாளர்களும்
இதனை எதிபார்த்தே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்பு உயர்த்தி இருப்பார்கள். பின்னர்
பொது மக்களுக்காக குறைப்பது போல ஒரு பாவனை செய்து, ஏற்றிய விலையில் round off செய்து குறைத்து
விடுவார்கள். என்ன, இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களும், அவர்கள் ஆட்சியில்
இருக்கும்போது இவர்களும் மக்களுக்காக போராட்டம் நடத்துவார்கள். மக்கள் மாற்றி மாற்றி
ஆட்சியில் உட்கார வைப்பார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை:
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு எப்போது
அவர்கள் மீது பாசம் வரும் என்றே சொல்ல முடியாது. திடீரென்று மறியல், போராட்டம், மாநாடு என்று
கிளம்புவார்கள். ஒரு கட்சி ஏசி பஸ்களில் கட்சி தொண்டர்களை அழைத்துச் சென்று அடுத்த
மாநிலம் மற்றும் தலைநகர் டெல்லி சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்..
இதனால் பிரச்சினை தீர்ந்ததா? என்றால், அதுவும் கிடையாது. இதுபோல் நாடெங்கும் நிறைய
போராட்டங்கள் புதுப்புது உத்திகளில்
நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
”டாஸ்மாக்”
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டில் ”டாஸ்மாக்” கடைகளுக்கு
பூட்டுபோடும் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதேபோல டாஸ்மாக்கால் விதவையானவர்கள்
என்று அவர்களை வைத்து ஒப்பாரி வைத்தார்கள். இனிமேல் இந்த போராட்டத்தை வரும் 2013-இல் அக்டோபர்
மாதம்தான் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் நடைபயணத்தில்
இருக்கிறார்கள். (முடிந்து விட்டதா இல்லையா என்று தெரியவில்லை) ஆனால் அவர்கள்
ஏனோ,பக்கத்தில் உள்ள பாண்டிசசேரியில் போய் இந்த மாதிரி போராட்டங்களை
நடத்துவதில்லை. ஒருவேளை அங்குள்ள அனைவரையும் பிரெஞ்சுக்காரர்களாக நினைத்து
விட்டார்கள் போலிருக்கிறது.
எல்லாமே கூட்டணி. அரசியல்:
போராட்டக்காரர்களை நான் இங்கு கிண்டல் செய்யவில்லை. ஒரே போராட்டத்தை ஒரே
நோக்கத்திற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இப்படி நடத்துவார்கள் என்ற
ஆதங்கம்தான். உண்மையில் நன்றாக சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் செய்வது போராட்டம் ( AGITATION ) கிடையாது. ஆர்ப்பாட்டம் (DEMONSTRATION ) மட்டும்தான். அதிலும் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும்
அதிகமாகும். எப்போது எந்த தேர்தல் வந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கூட்டணி
பேச்சுதான் இருக்கும். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு
கூட்டணி. எல்லாமே
அரசியல்.
ஒரு திரைப்படப் பாடல்:
ஆண்டவன் கட்டளை என்ற படத்தில், நமது சந்திரபாபு பாடும்பாடல் இது. பாடல்
கண்ணதாசன்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பாக்க சிரிப்பு வருது
மேடை யேறிப் பேசும் போது
ஆறு போலப் பேச்சு
கீழ இறங்கிப் போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி
கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு
உனக்குங்கூட ஓட்டு
No comments :
Post a Comment