Tuesday, July 9, 2013

டாக்டர் ராமதாசின் தலித் விரோதம்



டாக்டர் ராமதாஸ் தனது ஜாதி மக்களுக்காக ஒரு சங்கத்தையோ அல்லது ஒரு கட்சியை தொடங்கியபோது, தமிழ்நாட்டில்  யாரும் தப்பாகவோ அல்லது பெரிதாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாயுடு ம்ஹாஜன சங்கம், நாடார் சங்கம், 24மனை தெலுங்கு செட்டியார் சங்கம், பிராமணர் சங்கம், தாழ்த்தப்பட்டோர் சங்கம் என்று வரிசையாக இருந்தன.

ஆனால், இப்போது டாக்டர் ராமதாசை மட்டும் எல்லோரும் ஜாதி வெறியர் என்று ஏன் சொல்லுகிறார்கள்? ஒரு கால கட்டத்தில் ஆமாம் நான் ஜாதிவெறியன்தான் “ என்று அவரும் சொல்லிக் கொண்டார். காரணம் என்ன?


ஜாதி சங்கங்கள் செய்த பொதுவான விஷயங்கள்:

பொதுவாகவே ஜாதிச் சங்கங்கள் தொடங்கும்போது தனது ஜாதி மக்களை முன்னேற்ற, பாதுகாக்கவே தொடங்கப் பட்டதாக அறிவிப்பு செய்தார்கள். தங்கள் ஜாதி ஏழைப் பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்தல், திருமண உதவி செய்தல், வருமானத்தைப் பெருக்க அறக்கட்டளை நிறுவுதல், திருமண மண்டபங்கள் கட்டுதல் என்றுதான் சேவைகள் இருந்தன. இவைகளை விளம்பரப்படுத்த இந்திய சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் விழா நடத்தினர். பல ஜாதிச் சங்கங்கள் தொடங்கிய வேகத்தில், பண விவகாரத்தால்  உட்கட்சி பூசலால் முடங்கிப் போயின.

ஒவ்வொரு ஜாதி சங்கத்தினரும் தங்கள் எல்லையை உணர்ந்து செயல்பட்டனர். தங்கள் வளர்ச்சிக்காக மற்ற ஜாதியினரை தாக்கவோ அழிக்கவோ நினைக்கவில்லை. சின்னச் சின்ன
ஊர்ப் பிரச்சினைகளுக்கு எல்லாம் வர்ணம் தீட்டவில்லை.

ராமதாசின் அரசியல் பாதை:

மற்ற ஜாதிச் சங்கங்களைப் போலவே ராமதாசும் ஆரம்பத்தில் தனது வன்னியர் சங்கத்தையும் தொடங்கி நடத்தினார். ஒருசமயம் போராட்டத்தின் போது, வட மாவட்டங்களில் சாலைகளின் ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டி குறுக்கே போட்டு ஸ்தம்பிக்கச் செய்தபோது, தமிழ்நாடு அரசு, காவல்துறை, பொதுமக்கள் என்று அனைவரது பார்வையும் டாக்டர் ராமதாஸ் மீது விழுந்தது. “மரம்வெட்டி என்ற பெயர் வந்தது. அதன்பிறகு தனது பாதுகாப்பிற்காக அரசியல்வாதியென்ற முகமூடியை அணிந்து பாட்டாளி மக்கள் கட்சிஎன்று வன்னியர் சங்கத்தின் பெயரை மாற்றினார். கட்சியின் செயல்பாடுகள் ஒரு ஜாதிச் சங்கத்தின் அடிப்படையிலேயே இருந்தன. ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தலித் விரோத போக்கையே கடைபிடித்தார். பொதுத் தேர்தலில் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கும்போது , இந்தமுறை சரிப்பட்டு வராது என்பதற்காக தலித்துகளோடு சமாதானம் செய்து கொண்டார். இதற்கு தேர்தலில் விடுதலை சிறுத்தைகளோடு கூட்டணி ( உள்ளே பகை; உதட்டில் உறவு) வைத்துக் கொண்டார். 


அரசியலில் வெற்றி தோல்வி:

அரசியலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். ஒருசமயம் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஆலமரமாக இருந்த காங்கிரஸ் திமுகவால் சாய்க்கபபட்டது. திமுக உடைந்த பிறகு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக அல்லது அஇஅதிமுக தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. எம்ஜிஆர் இருக்கும்வரை கருணாநிதி கட்சியை நடத்த கடும் போராட்டங்களச் சந்திக்க வேண்டி இருந்தது. திமுகவை கலைத்து விடவில்லை. அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா என்று அரசியல் தொடர்ந்தது. ஆட்சியில் இல்லாத காலத்தில் இவர்களில் யாரும் கட்சியை கலைத்துவிட்டு ஓடிவிடவில்லை.

ராமதாசின் ஆயுதம்:

எந்த திராவிடகட்சி ஜெயிக்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.. ஆனாலும் ராமதாசின் வாய் சும்மா இருக்கவில்லை. இரண்டு திராவிட கட்சித் தலைவர்களையும் ஒன்று உச்சியில் வைத்து புகழ்வது அல்லது ரொம்பவும் மோசமாக தரங்கெட்டு விமர்சிப்பது என்று இருந்ததால் ஒருசமயம் , எந்த கூட்டணியிலும் சேர்க்கப்படாமல் கடும் தோல்வியைச் சந்தித்தார்.  அறக்கட்டளை, குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி போன்ற விஷயங்கள், மேலும் மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை (இந்தூர் மருத்துவக் கல்லூரி விவகாரம் CBI விசாரணக்கு வந்தது.) போன்ற விஷயங்கள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இவரது கட்சியில் இருந்த பேராசிரியர் தீரன், பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்முருகன் போன்றோர் இப்போது இல்லை. தான் தொடங்கிய கட்சி தன் காலத்திலேயே சரிவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு அவர் எடுத்த ஆயுதம்தான் தலித் மக்களுக்கு எதிரான அவதூறு,  அசிங்கப்படுத்துதல் மற்றும் மற்ற ஜாதிக்காரர்களை அவர்களுக்கு எதிராக ஒன்று சேர்த்தல்.


திவ்யா இளவரசன் காதல் விவகாரம்:

ஒரு ஆணும் பெண்ணும் காதல் செய்தனர், கல்யாணம் செய்து கொண்டனர். இருவருமே தமிழர்கள். ஆனால் இருவேறு ஜாதியினர். இந்தக் காதல் இவ்வளவு நெருக்கமாக வந்ததற்குக்  காரணமே இருவரது அப்பாக்களும் நண்பர்களாக இருந்ததுதான். இது அவர்கள் இருவரது குடும்பத்தோடு முடிந்துபோக வேண்டிய விஷயம். நாட்டில் இது போன்ற காதல் திருமணங்கள் நடக்காமல் இல்லை. நாடகக் காதல் என்றால் ஒரு பெண் எப்போதோ உதறி இருப்பாள். எத்தனையோ விவாகரத்து வழக்குகள் சொந்த ஜாதிக்குள்ளேயே நடைபெறுகின்றன. அவற்றை தீர்க்க முன்வராத டாக்டர் ராமதாஸ், தனது அரசியல் வளர்ச்சிக்காக ஒரு கட்டை பஞ்சாயத்து தலைவரைப்போல, இதில் மூக்கை நுழைத்து.  இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டார். இதனால் திவ்யா இளவரசன் காதல் பெரிதாக பேசப்பட்டது. அவர் தனது ஜாதிக்காக போராடட்டும். வேண்டாம் என்று  யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு காதல் திருமணத்தை ( ஒரு பஞ்சாயத்திலேயே முடிந்த விவகாரம் )  முன்னிட்டு, தலித்துகள் அனைவருமே விரோதி என்று அவர்கள் மீது  தாக்குதல் நடத்துவது, கேவலமாக பேசுவது எந்தவிதத்தில் நியாயம்? 


ஆனால் இது அரசியல் ரீதியாக டாக்டர் ராமதாசுக்கு ஒரு சறுக்கு ஆகும். இதுவரை இவரை ஆதரித்த அரசியல்வாதிகளின் நட்பையும் மற்ற ஜாதி மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார் என்பதே உண்மை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ற வரிசையில் வர வேண்டிய ஒருவர் ஜாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் “ குடுவைக்குள் அடைக்கப்பட்ட பூதம்“ போல் மாறி விட்டார். தனது அரசியல் வாரிசான தன்மகன் அன்புமணியையும் தவறான பாதையில் கொண்டு சென்று விட்டார். கலைஞர் கருணாநிதியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும், டாக்டர் ராமதாஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.  
                 
                           

Tuesday, May 14, 2013

” சீசன்” போராட்டக்காரர்கள்!




போராடுவோம்! ஒன்றுபடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் எழுப்பப்படும் கோஷம் இது.
ஆனால் முந்தைய மாதிரி, இன்று இறுதி வரை, வெற்றி கிட்டும் வரை யாரும் போராடுவதாகத் தெரியவில்லை. இது கோடைக் காலம், இது மழைக் காலம், இது குளிர்காலம் என்பது போல சீசனுக்குத் தகுந்தவாறு போராட்டம் நடைபெறுகிறது.

கல்விக் கட்டணம்:

இந்த கல்வியாண்டு தொடங்கி முடிந்தும் விட்டது. அடுத்த கல்வியாண்டும் தொடங்கப் போகிறது.. எப்போதும் போல பள்ளி, கல்லூரிகளில் கட்டண  வசூல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அடாவடி வசூல் எனப்படும் கட்டணக் கொள்ளையும் ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மவுனசாமிகள் ஆகிவிடுவார்கள். இதற்கென்று போராடுபவர்கள் இருக்கிறார்கள். களத்தில் குதிப்பார்கள். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் கல்விக் கொள்ளையர்கள் பற்றி அனல் பறக்க விவாதம் நடைபெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு விவாதம் நடத்தும் ஊடகங்களில் சிலவும்  கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.  போராட்டம் விவாதம் எல்லாம் ஒவ்வொரு ஆண்டின் கல்வியாண்டு தொடக்கத்தில்தான். அப்புறம், மீண்டும் அடுத்த ஆண்டுதான். இது வருஷா வருஷம் நடக்கும்  கதாகாலட்சேபம்தான். தீர்வு ஒன்றும் இருக்காது.

நதிநீர்ப் பிரச்சினை:

காவிரியில் ஆண்டு முழுக்க பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வருவது இல்லை. முன்பெல்லாம் சரியாக ஜூன் மாதம் 2-ஆம் தேதி, பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கும் சமயம்,  மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடுவார்கள். கர்நாடகா தகராறு செய்யத் தொடங்கியதிலிருந்து இது கிடையாது. காவிரிநீர்ப் பிரச்சினையைக் கையில் எடுப்பவர்கள். ஆண்டுதோறும்  ஜூன் - ஜூலை சீசனில் மட்டும் ஓங்கி ஓங்கி முழக்கம் போடுவார்கள். அதிலும் எதிர்பாராது மழை அதிகம் பெய்து காவிரி கரை புரண்டு ஓடத் துவங்கி விட்டால் போராட்டம் கிடையாது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் இவ்வாறே. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்பும், அரசு கெஜட்டில் அறிவிப்பும் வந்துவிட்டது. இந்த வ்ருடம் காவிரியில் தண்ணீர் வரும் நாளைப் பார்க்க வேண்டும்.   நதிநீர்ப் பிரச்சினைக்காகப் போராடுபவர்கள் யாரும்,  விளை நிலங்களையெல்லாம் பட்டா போட்டு விற்றுக் கொண்டு இருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளை தடுப்பதும் இல்லை கண்டிப்பதும் இல்லை.

பெட்ரோல்,டீசல் மண்எண்ணெய் விலை உயர்வு:

வருடா வருடம் பெட்ரோல் விலையையும் மற்ற விலைகளையும் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களும் வருடா வருடம் ஒரு நாள் பந்த் , போராட்டம் என்று நடத்துகிறார்கள்.  ஆட்சியாளர்களும் இதனை எதிபார்த்தே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்பு உயர்த்தி இருப்பார்கள். பின்னர் பொது மக்களுக்காக குறைப்பது போல ஒரு பாவனை செய்து, ஏற்றிய விலையில் round off செய்து குறைத்து விடுவார்கள். என்ன, இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களும், அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இவர்களும் மக்களுக்காக போராட்டம் நடத்துவார்கள். மக்கள் மாற்றி மாற்றி ஆட்சியில் உட்கார வைப்பார்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு எப்போது அவர்கள் மீது பாசம் வரும் என்றே சொல்ல முடியாது. திடீரென்று மறியல், போராட்டம், மாநாடு என்று கிளம்புவார்கள். ஒரு கட்சி ஏசி பஸ்களில் கட்சி தொண்டர்களை அழைத்துச் சென்று அடுத்த மாநிலம் மற்றும் தலைநகர் டெல்லி சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.. இதனால் பிரச்சினை தீர்ந்ததா? என்றால், அதுவும் கிடையாது. இதுபோல் நாடெங்கும் நிறைய போராட்டங்கள்  புதுப்புது உத்திகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

டாஸ்மாக்

சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டில் டாஸ்மாக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதேபோல டாஸ்மாக்கால் விதவையானவர்கள் என்று அவர்களை வைத்து ஒப்பாரி வைத்தார்கள்.  இனிமேல் இந்த போராட்டத்தை வரும் 2013-இல் அக்டோபர் மாதம்தான் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் நடைபயணத்தில் இருக்கிறார்கள். (முடிந்து விட்டதா இல்லையா என்று தெரியவில்லை) ஆனால் அவர்கள் ஏனோ,பக்கத்தில் உள்ள பாண்டிசசேரியில் போய் இந்த மாதிரி போராட்டங்களை நடத்துவதில்லை. ஒருவேளை அங்குள்ள அனைவரையும் பிரெஞ்சுக்காரர்களாக நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.


எல்லாமே கூட்டணி. அரசியல்:

போராட்டக்காரர்களை நான் இங்கு கிண்டல் செய்யவில்லை. ஒரே போராட்டத்தை ஒரே நோக்கத்திற்காக இன்னும்  எத்தனை  ஆண்டுகள்தான் இப்படி நடத்துவார்கள் என்ற ஆதங்கம்தான். உண்மையில் நன்றாக சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் செய்வது போராட்டம் ( AGITATION ) கிடையாது. ஆர்ப்பாட்டம் (DEMONSTRATION )  மட்டும்தான். அதிலும் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அதிகமாகும். எப்போது எந்த தேர்தல் வந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கூட்டணி பேச்சுதான் இருக்கும். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி. எல்லாமே அரசியல்.

ஒரு திரைப்படப் பாடல்:

ஆண்டவன் கட்டளை என்ற படத்தில், நமது சந்திரபாபு பாடும்பாடல் இது. பாடல் கண்ணதாசன்.

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பாக்க சிரிப்பு வருது
மேடை யேறிப் பேசும் போது
ஆறு போலப் பேச்சு
கீ இறங்கிப் போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி
கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு
உனக்குங்கூட ஓட்டு